Thursday, December 11, 2008

மகாகவி பாரதியார்


அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!

<>

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூய ராமென்றிங் கூதேடா சங்கம்!

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்!

<>


கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்

<>


யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

<>


காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்


<>




" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி"

வாழ்க்கையை கவியாய் செய்தோனுக்கு இன்று 126வது பிறந்ததினம்..

<>


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

புதிய தமிழ் யுகத்தின் வரகவி
எங்கள் பாரதி வாழிய வாழியவே!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!

இன்னுமொரு நூற்றாண்டும், பல்லாண்டும், பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரமாண்டு "இரும்"!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினி எம்மிடங் காட்ட வந்தார் அதை
வெட்டி விட்டோம் என்று கும்மியடி!

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப் பில்லை காணென்று கும்மியடி

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினுங் கை கொடுத்து
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு உதவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - மிடிப்
பயங் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லு வார்.

மும்பை பகைவெல்லு வார்